ஆதாரமற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக நிராகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தவறான எண்ணக்கருவில் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி குறித்து, அரசாங்கம் தமது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன், அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது.
இந்தப் பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவிற்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறது.
2021 ஆம் ஆண்டு ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலதிகமாக, 2006 ஆம் ஆண்டில் கனடாவானது, தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பொன்றாக அறிவித்ததுடன், 2024 ஆம் ஆண்டு ஜூனில் இவ்வகைப்படுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தியதாக அரசாங்கம் வலியுறுத்தியது.
பிரம்ப்டன் நகர சபையின் இவ்வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது.
இச்செயற்பாடு குறித்த முன்னெடுப்புக்களை, பரந்தளவிலான இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரானதான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் அயராத முயற்சிகளைச் சீர்குலைப்பவையாக அமையுமென, இலங்கை அரசாங்கம் உறுதியாக நம்புகிறது.
இது தொடர்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், இன்று கனேடிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அதனை அடிப்படையாகக்கொண்ட நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்புதல் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் கடுமையான ஆட்சேபனைகளை இந்த சந்திப்பின் போது மீண்டும் வலியுறுத்தினார்.
இம்முன்னெடுப்புக்கள் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்குவதுடன், அவற்றைப் பெரிதும் பலவீனப்படுத்துகிறதெனவும், குறிப்பிட்டுள்ளார்.