இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை எனவும், கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்வி வாரம் அனுஷ்டிப்பு என்பன வருத்தமளிப்பதாகவும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ் தள பதிவொன்றில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஒற்றுமை, கண்ணியம் மற்றும் நல்லிணக்கத்திற்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு குடிமகனாக, கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டமை மற்றும் இனப்படுகொலை கல்வி வாரம் அனுஷ்டிக்கப்பட்டமை குறித்து, வருத்தம் அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை எனவும், அந்த கூற்று ஆதாரமற்றதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமாகும். எந்தவொரு சர்வதேச நீதிமன்றமும் இலங்கையை இதுவரை இனப்படுகொலைக் குற்றவாளியாகக் கண்டறியவில்லை.
இலங்கையில் நடந்தது துன்பகரமானதும், அதேநேரம் கனடா உட்பட 30 க்கும் அதிகமான நாடுகளில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பினருடனான மோதலை, முடிவிற்குக் கொண்டு வருவதற்குமான இராணுவ நடவடிக்கையாகும்.
அது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமே தவிர, எந்தவொரு சமூகத்துக்கும் எதிரானது அல்ல.
போரின் போது அப்பாவி மக்கள் ஒவ்வொருவரினதும் உயிரிழப்பு மனவேதனையை ஏற்படுத்தினாலும், இந்த மோதலை இனப்படுகொலை எனச் சித்தரிப்பது உண்மையைச் சிதைப்பது மாத்திரமல்லாமல், அவமதிப்பை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, கனடாவில் இடம்பெறும் இவ்வாறான செயற்பாடுகள், நமது கள யதார்த்தங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.