உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகள் மூலம் மக்கள் அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். அதனால் மக்களின் எச்சரிகையை புரிந்துகொண்டு அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என முன்னிலை சோசலி கட்சியின் செயலாளர் குமார் குணரத்னம் தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (11) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்துக்கு நாட்டு மக்கள் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது.இந்த தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் எதுவும் இடம்பெறப்போவதில்லை.
அதனால் கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைமக்கள் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை மக்கள் வழங்க வேண்டும் என்றே போராட்ட அணியாக தெரிவித்து வந்தோம். தேர்தல் பெறுபேறுகளை பார்க்கும்போது மக்கள் எமது கோரிக்கைக்கு ஓரளவு செவிவாய்த்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
அரசாங்கம் கடந்த காலங்களில் தேர்தல் மேடைகளில் தெரிவித்த விடயங்களை மறந்து புதிய தாராளவாத கொள்கையில் வேகமாக பயணித்துக்கொண்டிருக்கிறது.
மக்கள் எதிர்கொண்டுள்ள வரி சுமையை குறைப்பதாக தெரிவித்த வாக்குறுதியை மறந்து நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமைய அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை மேலும் அதிகரித்துள்ளது. பாடசாலை உபகரணங்கள் மற்றும் சுகாதார உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி ஒரு சதமேனும் குறைக்கவில்லை.
மக்கள் விராேதமாக நாட்டின் பொருளாதார சுதந்திரத்தை இந்தியாவுக்கு காட்டிக்கொடுக்கும் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தங்களை இதுவரை நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை.
இவர்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் கடுமையாக எதிர்த்து வந்த அரச அடக்குமுறையை இன்று போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து வருகின்றனர். இவ்வாறான நிலைமையிலே இந்த தேர்தல் இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தி சகோதரர்கள் தேர்தல் மேடைகளில் கடந்த அரசாங்கங்களுக்கு எதிராக மேற்கொண்டுவந்த கடும் எதிர்ப்பு மற்றும் அரசியல் விமர்சனத்துடனே மக்கள் அவர்களின் பால் அணி திரண்டனர்.
என்றாலும் இடம்பெற்று முடிந்த தேர்தல் பெறுபேறுகளை பார்க்கும்போது அரசாங்கத்தின் மீது இருந்த நம்பிக்கை இல்லாமல் போய் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த பொதுத் தேர்தல் தேசிய மக்கள் பெற்ற வாக்குகளைவிட 23இலட்சம் வாக்குகள் இந்தமுறை குறைவடைந்துள்ளது.
எனவே இந்த தேர்தல்பெறுபேறு மூலம் மக்கள் வழங்கிய எச்சரிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும். வேறு காரணங்களை தெரிவித்து அரசாங்கம் மக்களின் எச்சரிக்கையை தட்டிக்கழிக்க முற்பட்டால் அதன் பாதிப்பு அரசாங்கத்துக்கே ஏற்படும்.
ரணில் விக்ரமசிங்க செயற்படுத்திய மக்களை அழுத்தத்துக்கு ஆளாக்கும் நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தையே அரசாங்கம் முன்னெடுத்து செல்வதால், அரசாங்கத்தின் மீது மக்களுக்கு விரக்தி ஏற்படுள்ளது.
அதனால் நாட்டு மக்கள் வழங்கிய எச்சரிக்கையை புரிந்துகொண்டு, அவர்கள் வேகமாக பயணிக்கும் புதிய தாராளவாத வேலைத்திட்டத்தை மாற்றியமைக்க அரசாங்கத்துக்கும் இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது. தீர்மானம் எடுக்கும்போது பொது மக்களின் பால் இருந்து தீர்மானங்களை எடுப்பதற்கு தற்போதும் அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.