நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டத்தை வகுப்பதற்கு அரசாங்கம் தற்போது மும்முரமாக செயல்பட்டு வருகிறது – இவ்வாறு ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
கொத்மலையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக விடுத்த அனுதாப செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு,
‘தற்போதுள்ள சட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும் சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதன் மூலமும் இவ்வாறான விபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்காக ‘தூய இலங்கை’ (கிளீன் சிறீ லங்கா) திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்று (நேற்று) காலை நடந்த இந்த கொடூரமான வீதி விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்
கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சகல தொடர்புடைய மருத்துவ மனைகளையும் தயார்படுத்தவும் இது தொடர்பாக தேவையான அனைத்து எதிர்கால நடவடிக்கைகளையும் எடுக்கவும் படையினருக்கும் சுகாதார துறைக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன் -என்றுள்ளது.