கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களுக்கு கால அவகாசம் வழங்கியது தமிழரசுக்கட்சி!

கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களுக்கு கால அவகாசம் வழங்கியது தமிழரசுக்கட்சி!

editor 2

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்துசென்றவர்கள் மீண்டும் வந்து இணைய வேண்டும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அத்துடன், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் குறிப்பாக கொழும்பில் போட்டியிடுவது தொடர்பிலும் அந்தக் கட்சி பரிசீலித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின மத்திய குழுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தவை வருமாறு,

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சி எடுத்த மூன்று தீர்மானங்களுக்கு மாறாக, செயல்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், பா. அரியநேத்திரனை கட்சியில் இருந்து விலக்குமாறு பலமான
கருத்துகள் சொல்லப்பட்டாலும் சில விடயங்கள் தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவத்தை
உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேடமான அறிவிப்பு ஒன்றை மனமுவந்து விடுக்கின்றோம். தமிழ்த் தேசியப்பரப்பில் இருக்கின்ற – விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வௌ;வேறு காலகட்டங்களில் விலகிச்சென்ற கட்சிகளை மீண்டும் எங்களுடன் இணைந்து தேர்தலுக்கு
முகங்கொடுக்கவேண்டும் என்று விநயமாக அறிவிப்பு விடுக்கின்றோம்.

சவால்மிக்க ஒரு சூழலில் இந்தத் தேர்தல் இருப்பதனால் இணங்கிவந்து இந்தத்
தேர்தலுக்கு முகங்கொடுக்குமாறு இரு கரம் நீட்டி அழைக்கின்றோம்.

தமிழ் அரசுக் கட்சியின் பெயரிலும் அதன் சின்னத்திலும்தான் நாங்கள் கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட்டிருந்தோம். அவ்வாறே இந்தத் தேர்தலிலும் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருக்கிறோம். இந்த அழைப்பை ஏற்று வந்தால் மிகவிரைவாக நாங்கள் பேச்சு மூலம் வேட்பாளர்களை நிறுத்தும் விடயங்களை இணைந்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம்.

அடுத்துவரும் ஒரு சில நாட்களில் அவர்க ளின் பதிலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு இணங்கி வராவிட்டால் தமிழ் அரசுக் கட்சி தனித்தும் போட்டியிடும். இம்முறை தேர்தலில் வட, கிழக்குக்கு வெளியே தலைநகர் உட்பட தமிழர்கள் வாழ்கின்ற ஏனைய சில மாவட்டங்களிலும் போட்டியிடுவது தொடர்பாகவும் பரிசீலனை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பொதுக்கட்டமைப்பிடம் இருந்து இதுவரை எந்தவித அழைப்பும் வரவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ்க் கட்சி. இதுவரை தமிழ்த் தேசிய
கூட்டமைப்பாக வேறு பல கட்சிகளுடன் இணைந்து செயல் பட்டபோதும் எமது சின்னத்திலும் பெயரிலுமே தேர்தலில் போட்டியிட்டோம். அந்தவகையில் பிரதான கட்சி என்ற வகையிலேயே இந்த அழைப்பை விடுக்கிறோம்.

வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக சரியான அணுகலை நாங்கள் மேற்கொள்வோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மக்களிடத்தில்
பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குப் பிறகு பல்வேறு எண்ணப்பாடுகள் கூடியிருக்கின்றன. அது நல்ல விடயம். எனவே, இளைஞர்கள், ஆற்றலுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என்று அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையிலேயே வேட்பாளர் தெரிவு நடைபெறும். இதனைஆராய்வதற்காக நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும் மாவட்ட
ரீதியாக கலந்தாலோசித்து அந்த முடிவுகளை எடுப்போம் – என்றார்.

Share This Article