“சூடு சொறணை இல்லையா?” மாவையைக் கேட்ட சுமந்திரன்! வவுனியாக் கூட்டத்தில் பரபரப்பு!

Editor 1

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் தற்போது நடைபெற்றுவரும் சூழலில் காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழரசுக்கட்சியின் விவகாரம் தொடர்பிலான அண்மைக்கால சர்ச்சை தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் சபை வரைமுறையைத் தாண்டி நடைபெறுவதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.

இதன் போது,

தமிழரசுக்கட்சி விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவரும் சூழலில் நீங்கள் தலைவராக இருக்கிறீர்கள், உங்களுக்கு சூடு, சொறணை இல்லையா? என்று மாவை சேனாதிராஜாவைப் பார்த்து எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியதாகவும் அதனைத் தொடர்ந்து அந்தக் கூட்டத்தில் பங்குகொண்டிருந்த மாவை சேனாதிராஜாவின் மகன் அமுதன் சேனாதிராஜா, இந்தச் சிக்கல்களுக்கு நீங்கள் தானே காரணம்,? என்று சுமந்திரனைப் பார்த்துக் கேள்வி எழுப்பிய நிலையில் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் அமுதன், எவ்வாறு கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்று பொதுச் செயலாளராக தற்காலிகமாக பணியாற்றிவரும் சத்தியலிங்கத்தைப் பார்த்து சுமந்திரன் கேள்வி எழுப்பியிருப்பதாக தெரியவருகிறது.

இந்நிலையில், மத்திய குழுவில் அங்கத்துவம் பெறுவதற்காக தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப்படிவம் தொடர்பில் பகிரங்கப்படுத்துமாறு அமுதன், சத்தியலிங்கத்தைப் பார்த்து கேட்டபோதிலும் சத்தியலிங்கம் அமைதி காத்ததால் அமுதன், கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளதாக சம்பவ இடத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடருந்தும் அங்கு குழுப்ப நிலை நீடிப்பதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share This Article