யாழில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த போலி மருத்துவர் சிக்கினார்!

யாழில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த போலி மருத்துவர் சிக்கினார்!

Editor 1

போலி ஆவணங்களை காண்பித்து தன்னை மருத்துவர் என்று அறிமுகப்படுத்தி கனடாவில் உள்ள ஒருவரிடம் ஒரு கோடியே 42 இலட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சுன்னாகத்தை சேர்ந்த 29 வயது நபராவார்.

அவரிடம் இருந்து அதிசொகுசு கார், 15 பவுணி நகைகள், 5 இலட்சம் ரூபாய் பணம், 5 கைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இளைஞர், தன்னை ஒரு மருத்துவராக அடையாளப்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, கனடாவிலுள்ள ஒருவரை தொடர்பு கொண்ட அவர் மருத்துவ மேற்படிப்புக்காக புலமைப் பரிசில் கிடைத்துள்ளது.

அதற்கு பணம் தேவை. இதற்காக யாழ். நகரிலுள்ள காணி ஒன்றை விற்கப் போவதாகக் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து போலி ஆவணங்கள் மூலம் அந்தக் காணியை ஒரு கோடியே 42 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். வங்கி மூலம் பணம் பரிமாறப்பட்டது.

இதன் பின்னரே விடயமறிந்த கனடா வாசி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மருத்துவர் என்று கூறி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேநேரம், தன்னை மருத்துவர் என்று அடையாளப்படுத்திய கைதான நபர் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்குவதாகக் கூறியும் வெளிநாடுகளிலுள்ள பலரிடம் பணம் பெற்றமை தெரியவந்துள்ளது.

Share This Article