பொலிஸாரின் துணையுடன் வெளிநாட்டிலிருந்து வந்தவர் தாக்கியதாக வவுனியா வைத்தியாலையில் ஒருவர் அனுமதி!

பொலிஸாரின் துணையுடன் வெளிநாட்டிலிருந்து வந்தவர் தாக்கியதாக வவுனியா வைத்தியாலையில் ஒருவர் அனுமதி!

editor 2

வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ள நபர் ஒருவருடன் சேர்ந்து புளியங்குளம் பொலிஸார் தன்னைத் தாக்கினர் எனத் தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார குறித்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.

வவுனியா சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் தெரிவிக்கையில்-

விசாரணை ஒன்று இருப்பதாக புளியங்குளம் பொலிஸார் நேற்று முன் தினம் என்னை அழைத்தனர். நான் அங்கு சென்ற நிலையில் எனது தொலைபேசி, கைப்பை என்பன பறிக்கப்பட்டு இரு கைகளிலும் விலங்கு போடப்பட்டது.

பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய பொலிஸார் என்னை பிடித்து வைத்திருக்க, வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து என்னை தாக்கினார்.

பின்னர் நாய்போல என்னை இழுத்துச்சென்ற அவர்கள் அந்த நபரின் வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். இதன்போது நான் பொதுமக்களின் உதவியை நாடி பிரதான வீதியை மறித்திருந்தேன்.

பின்னர் மீண்டும் என்னை பொலிஸ் நிலையத்துக்குள் இழுத்துச் சென்றனர். அங்கு பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி அவரது சப்பாத்துக் கால்களால் எனது நெஞ்சில் தாக்கினார்.

பின்னர் அங்கு வந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் வாக்குமூலம் பெற்றுவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து என்னையும் எனது மனைவி பிள்ளைகளையும் வீட்டுக்கு
அனுப்பினார்.

பொலிஸார் தாக்கியதால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்-என்றார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பாக தாக்கப்பட்டவரின் மனைவி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன் வைத்தியசாலை
பொலிஸாரிடமும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

Share This Article