உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணை; கோட்டாவிடம் ஒரு கோப்பு வழங்கப்பட்டதாக மைத்திரி தகவல்!

editor 2

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதன் அறிக்கையை கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தபோது தனிப்பட்ட ஒரு கோப்பையும் வழங்கி, இதனை யாருக்கும் வழங்க வேண்டாம் என தெரிவித்திருந்தது. அந்த கோப்பில் இருக்கும் விடயம் என்ன என்பது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் இந்தளவுக்கு விவாதம் நடத்தப்பட்ட விடயம் வேறு எதுவும் இருக்காது. இதில் நானே இலக்காக இருக்கின்றேன். தாக்குதல் நடந்த நாள் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்து தெரிவித்துள்ளேன். அதன்போது புலனாய்வு பிரிவோ, பாதுகாப்பு தரப்பினரோ எனக்கு அறிவிக்கவில்லை. இதனை மக்கள் நம்புகின்றார்கள் இல்லை. நான் தெரிந்துகொண்டே வெளிநாட்டுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கின்றனர். இதன்படி நானே பொறுப்பு கூற வேண்டியவர் என்றும் கூறுகின்றனர்.

7 பேர் கொண்ட நீதியரசர்களைக் கொண்ட வழக்கு விசாரணையில் எனக்கு தகவல்கள் அறிவிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நான் சபையில் சமர்ப்பிக்கின்றேன். நான் 2016 ஆம் ஆண்டு முதல் எனக்கு கிடைத்த தகவல்கள் தொடர்பில் பாதுகாப்பு சபையில் கூறியுள்ளேன். சர்வதேச நாடுகளில் ஐ.எஸ் அமைப்பினர் தாக்குதல்களை நடத்தும் போது இங்கு இவ்வாறு நடக்க இடமளிக்க கூடாது என்று நான் அடிக்கடி பாதுகாப்பு சபையில் கூறியுள்ளேன்.

சஹ்ரானை கைது செய்யாமை தொடர்பில் கூறுகின்றனர். அவரை கைது செய்யவென அதிகாரிகள் இருக்கின்றனர். அதற்கு ஜனாதிபதி செல்வதில்லை. நான் 2019 ஜனவரியில் நடந்த பாதுகாப்பு சபையில் இவரை கைது செய்யாது இருக்கின்றமை தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ளேன். அத்துடன் ஒரு வருடமே பொலிஸ் அதிகாரம் எனக்கு கீழ் இருந்தது. கிடைத்து 6 மாதத்திலேயே குண்டு வெடித்தது. இவ்வாறு குண்டு வெடிக்க முன்னர் நான்கு வருடங்கள் என்னிடம் பொலிஸ் அமைச்சு இருக்கவில்லை. சம்பவம் நடந்த பின்னர் சஹ்ரானுடன் தொடர்புடைய முழு அமைப்புகளையும் இல்லாமல் செய்துவிட்டேன்.

இதேவேளை, தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை மாத்திரமல்ல, ஜனாதிபதி அமைக்கும் ஆணைக்குழுவின் ஊடாகவும் விசாரணைகளை நடத்துமாறு கோருகின்றேன். சர்வதேச ரீதியில் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் ஐ.நா.விடமும் நாங்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு கேட்கின்றேன்.

அத்துடன், இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி விசாரணைகுழுவொன்றை நான் நியமித்தேன் அந்த விசாரணைக்குழு 3 வருடங்களில் அதன் அறிக்கையை கோட்டாபய ராஜபக்ஷ்விடம் கையளித்தார்கள். இதன்போது வேறு ஒரு கோப்பொன்றையும் அவர்கள் கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு கையளித்துவிட்டு, இதனை சட்டமா அதிபருக்கோ வேறு யாருக்குமோ வழங்க வேண்டாம். நீங்கள் மாத்திரம் வைத்துக்கொள்ளுங்கள் என தெரிவித்திருந்தார்கள். அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாது. அதனை தெரிந்துகொள்ள யாரும் முயற்சிக்கவும் இல்லை.

அத்துடன், சிலர் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இங்கு விவாதங்களைள நடத்தி இன்னும் பணத்தை செலவழிக்க தேவையில்லை. என்மீது குற்றச்சாட்டை முன்வைத்தவருக்கு பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கினேன். நான் வழங்கியது வேண்டாம் என்றால் அந்த பதவியை அவர் தூக்கி எறிய வேண்டும். வெட்கம் இல்லாமல் இன்னும் அந்த பதவியை பயன்படுத்தி வருகிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்து அவருக்கு பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கினேன். இந்நிலையில் சில இராணுவ அதிகாரிகள் என்னிடம் அவர் பற்றி கூறுவர். யுத்தம் செய்வதாக கூறிக்கொண்டு கிளிநொச்சி வரும் அவர் கொங்கிரிட் பங்கருக்குள் இருப்பார். அவர் யுத்த களத்திற்கு சென்றவர் அல்ல என்றனர். நாய் மனித கால்களை கடிக்கும் ஆனால் மனிதன் நாயின் காலை கடிப்பதில்லை. அதனால் இதற்குமேல் அவர் தொடர்பில் கதைக்கப்போதவில்லை என்றார்.

Share This Article