சிவாஜிலிங்கம் கொழும்பு மேல் நீதிமன்றால் பிணையில் விடுதலை!

editor 2

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை ஏற்பாடு செய்தமை அல்லது அதில் பங்குபற்றியமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று அவர் முன்னிலையானபோதே குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை சிவாஜிலிங்கத்திடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் 27வது பிரிவின் கீழ், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினரான திலீபன் என்ற இராசையா பார்த்தீபனின் 33வது ஆண்டு நினைவேந்தலை கடந்த 2020 செப்டெம்பர் 15ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம், கோண்டாவில் கோகுல வீதியில் முன்னெடுத்தார் என்றும், 2011 ஆகஸ்ட் 29ஆம் திகதி விடுதலைப் புலிகளை தடை செய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விதிகளை மீறியதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட சிவாஜிலிங்கத்துக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை 2022இல் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட 7 தவணைகளில் சிவாஜிலிங்கம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவ்வேளைகளில் அவர் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றஞ்சாட்டப்பட்ட சிவாஜிலிங்கம் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிடியாணை பிறப்பித்திருந்தார்.

அதனையடுத்து, இன்று சட்டத்தரணி உதார முஹந்திரத்தின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அரசகுலரத்ன, இரட்ணவேல் ஊடாக சிவாஜிலிங்கம் நீதிமன்றில் ஆஜரானார்.

தமது கட்சிக்காரர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ளதாகவும், இது குறித்து அறிந்த பின்னர் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியதாகவும் சிவாஜிலிங்கத்தின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சிவாஜிலிங்கத்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும், அவரை விளக்கமறியலில் வைப்பது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், மேல் நீதிமன்ற நீதிபதி தனக்குள்ள அதிகாரத்தின்படி, பிணை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முன்வைக்கப்பட்ட அனைத்தையும் பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதி, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் சிவாஜிலிங்கத்தை விடுவிக்க உத்தரவிட்டார்.

பின்னர், இந்த வழக்கை ஒக்டோபர் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இன்றைய தினம் வழக்கில் சிவாஜிலிங்கம் ஆஜரானபோது அவரை கைது செய்தபோது கைப்பற்றிய வாழைக்குற்றி, கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் சான்றுப் பொருட்களாக மன்றில் குறிப்பிட்டிருந்தமை முக்கிய விடயமாகிறது.

Share This Article