புலனாய்வுப் பிரிவிலிருந்து பிள்ளையான் குழுவிற்கு மாதாந்தம் 35 இலட்சம் ரூபா – அனுர தகவல்!

editor 2

புலனாய்வு பிரிவின் கணக்கில் இருந்து இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் குழுவினருக்கு தற்போதும் மாதாந்தம் 35 இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றதா? என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியினரால் தங்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

சிவனேசதுரை சந்திரகாந்தன் உரையாற்றுகையில்,

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எனது பெயரை குறிப்பிட்டு கருத்து தெரிவித்தார்.

அரசியலுக்காக நீங்கள் எதனையும் பேசலாம். ஆனால் நீங்கள் ஒருவிடயத்தை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

நீங்களும் அரசியல் செய்யும் காலத்தில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நாங்கள் பிரிந்து வந்த போது உங்களுடைய அமைப்பினால் (ஜே.வி.பி) துப்பாக்கிகள், ஆயுதங்கள் வழங்கப்பட்டன.

அப்படியென்றால் நீங்கள் உங்கள் அமைப்பில் இருந்த பிணையில் விடுவிக்கப்பட்ட மகன்மார்களுக்கு உங்களின் பழைய துப்பாக்கிகள், வெடி குண்டுகளை கொடுத்திருக்க முடியாதா? என்றார்.

இதற்கு பதிலளித்த அனுரகுமார திஸாநாயக்க,

விடுதலை புலிகளுக்கு நாங்கள் ஆயுதங்கள் வழங்கியதாக கூறுவதை முற்றாக நிராகரிக்கின்றோம். அது தவறான கருத்து. எமது அமைப்பு ஆயுத அரசியலில் ஈடுபட்டது. அது முழுமையாக நிறைவடைந்தது. இது தொடர்பில் விசாரணை நடத்த முடியும். புலனாய்வு கணக்கில் மாதாந்தம் 35 இலட்சம் ரூபா கணக்கில் வழங்கப்பட்டு பிள்ளையானின் குழு பராமறிக்கப்பட்டது. இப்போதும் 35 இலட்சம் வழங்கப்படுகின்றதா என்று கேட்க விரும்புகின்றேன் என்றார்.

Share This Article