இனி எங்களால் போராட முடியுமா என்பது கூட எமக்குத் தெரியாமல் இருக்கின்றது என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.
வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் 30 ஆம்திகதி சர்வதேச நீதியைக் கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட, சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட, கையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடித்தான் நாம் ஜனநாயகப் போராட்டத்தை அஹிம்சை வழியில் 14 வருடங்களாகத் தொடர்ச்சியாக வீதியில் நின்று முன்னெடுத்து வருகின்றோம்.
புதிய அரச தரப்பினர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி, புதிதாக பயங்கரவாத எதிர்ப்புத் தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்த நினைக்கின்றார்கள். ஆனால், அதைச் செய்கின்ற போது எமது ஜனநாயக போராட்டத்துக்கான கருத்துச் சுதந்திரமோ, தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து போராடுவதற்கு பயங்கரவாத எதிர்ப்புத் தடுப்புச் சட்டமானது ஒரு படிக்கல்லாக அமையும் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், ஏனையவர்களிடமும் நிறைவேற்றாது நிறுத்த வேண்டும் என்பதனை ஊடக வாயிலாகக் கேட்டு கொள்கின்றோம்.
இலங்கை தேச மக்கள் அழிக்கப்பட்டிருக்கின்ற போதும் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கும் எந்த ஒரு நீதியும் வழங்காமல் இந்தச் சர்வதேசம் பார்த்து கொண்டிருக்கின்றது.
அதேபோன்று கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்ற உறவுகளைத் தேடி நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற போது இலங்கை தேசத்தை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றீர்கள்.?
உறவுகள் இனியாவது மனிதர்களாக வாழ வேண்டும். ஏனையவர்களுடன் வாழ்வதற்கு உதவ வேண்டும் என்பதற்காக நடக்க இருக்கின்ற ஜெனிவாக் கூட்டத் தொடரிலாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றங்கள் இழைத்தவர்களைப் பாரப்படுத்தி மக்களுக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என்பதை நாம் மிகவும் பணிவாகக் கேட்டு நிற்கின்றோம்.
இனி எங்களால் போராட முடியுமா என்பது கூட எமக்குத் தெரியாமல் இருக்கின்றது. ஏனென்றால் அச்சுறுத்தல்கள், தடை உத்தரவுகள் இருந்தன. தற்போது நீதிமன்ற வழக்குகள் கூட எமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே, தொடர்ச்சியாகப் போராட சர்வதேசம் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.