இந்தியாவில் 242 பேருடன் பயணித்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே
விபத்துக்குள்ளனாது. இதில், உயிரிழந்தவர்களின் 205 சடலங்களை மீட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
அத்துடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்
என்றும் தெரிவிக்கப்பட்டது.
இறந்தவர்களில் ஒருவர் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய்
ரூபானி (வயது 69) என்பதை இந்திய மத்திய அமைச்சர் சி. ஆர். பாட்டீல் உறுதிப்படுத்தினார்.
அவர் லண்டனிலுள்ள தனது குடும்பத்தவர்களை காணச் சென்றிருந்தார் என்று
கூறப்படுகிறது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து எயர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்த மான போயிங் 787-8 விமானம்
230 பயணிகள் 12 விமான சிப்பந்திகளுடன் சரியாக மதியம் 1.38 மணிக்கு
லண்டன் கற்விக் விமான நிலையம் நோக்கி புறப்பட்டது. ஏஐ171 பயண
இலக்கத்துடனான இவ் விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில், 169 இந்தியர்கள், 53 பிரித்தானியர், 7 போர்த்துக்கேயருடன், கனடா நாட்டை சேர்ந்த ஒருவரும் பயணித்திருந்தனர். விபத்துக்குள்ளான விமானம் வெடித்து முன்பகுதி அங்குள்ள மருத்துவ கல்லூரி மாணவர்களின் விடுதியின் மீது விழுந்தது. மற்றைய பாகம் குடியிருப்பு பகுதியின்மீது விழுந்தது.
லண்டன் பயணமான விமானத்தில் எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டிருந்தது. இதனால், விபத்துக்குள்ளான விமானம் மளமளவென்று தீப்பற்றி எரிந்தது.
விபத்தையடுத்து, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. 204 பேரின்
உடல்கள் மீட்கப்பட்டன. 41 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஐவரும்
உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்களும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்ததால் பலியானோர்
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். பயணி ஒருவர் உயிர் பிழைத்ததை அகமதாபாத்
பொலிஸ் ஆணையர் ஜி. எஸ். மாலிக் உறுதி செய்துள்ளார். ’11ஏ இருக்கையில்
பயணித்த பயணி ஒருவர் உயிரோடு இருப்பதை பொலிஸார் அடையாளம்
கண்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது.
குடியிருப்பு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதால் பலியானவர் எண்ணிக்கை அதிகரிக் கக்கூடும்’ என்றும் அவர் கூறினார். ரமேஷ் விஷ்வகுமார் (வயது 38) என்பவரே உயிர் பிழைத்தவர் என்று தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இந்த விமான விபத்துக்கு இலங்கை உட்பட பல நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.