யாழ்ப்பாணம் – கற்கோவளத்தில் காணி ஒன்றிலிருந்து மனித மண்டையோடும் எலும்புகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. முன்னர் இராணுவ முகாம் இருந்த காணியின் பின்புற காணியிலேயே இவ்வாறு மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று முற்பகல்வேளை மாடுகளை மேய்ப்பதற்கு சென்ற ஒருவர் மண்டையோட்டை அவதானித்து அது குறித்து அந்தப் பகுதியின் கிராம சேவகருக்கு அறிவித்துள்ளார். கிராம சேவகர் பருத்தித்துறை பொலிஸாருக்கு அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை நடத்தியதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, பருத்தித்துறை நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந், சட்ட மருத்துவ அதிகாரி பகீரதன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
நீதிவானின் உத்தரவின்பேரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் யாழ். போதனா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த மனித எலும்பு எச்சங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிய வருகிறது.