இலங்கை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகை இலங்கையின் ஏற்றுமதித் துறைக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்தியிருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று (30) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன் போது இலங்கை பொருளாதார ரீதியில் சரிவடைவதற்குக் கடந்த ஆட்சியாளர்களின் அரசியல் முறையும், வீண்விரயமும், மோசடியுமே காரணமாக அமைந்திருந்தது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி,
இப்போது நாடு மீண்டும் சரியான நிர்வாகத்தைக் கொண்டதாக மாற்றப்பட்டு வருவதாகவும், அதற்குச் சிறிது காலம் அவகாசம் அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கத்தின் மீது ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கையில் கடந்த அரசாங்கங்கள் தெற்கு சிங்கள வாக்குகளை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டன.
ஆனால் இம்முறை வடக்கின் தமிழ் மக்கள், கிழக்கு முஸ்லிம் மக்கள் மற்றும் தெற்குச் சிங்கள மக்களும் தற்போதைய அரசாங்கத்தை உருவாக்க ஆதரவளித்தனர் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.