ஜனாதிபதி தனது ஜேர்மன் பயணத்தில் விடுதலை புலிகள் அமைப்பின் நெடியவன் என்பவரை சந்திக்கவுள்ளாரென சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன என்று நான் தெரிவித்திருந்தேன். இதனை
அடிப்படையாக்க கொண்டு நான் இனவாதத்தை தூண்டுவதாகக் குறிப்பிட்டு என்னை கைது செய்வதற்கான முயற்சிகள் நடக்கின்றன – இவ்வாறு முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில
தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது, ‘ஜே. வி. பி.யின் செயல்பாட்டாளர்களே என்னை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தின் பல்வேறு தவறுகளை நான் ஆதாரத்துடன் நாட்டுக்கு வெளிப்படுத்துவதால்தான் என்னை கைது செய்வதற்கு தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நான் இனவாதத்தைத் தூண்ட முயற்சித்தேன் என்று குறிப்பிட்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள்மீதான சர்வதேச சட்டத்தின் கீழ் என்னை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுவருகிறது.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் நீண்ட காலம் பிணை இன்றி
என்னை விளக்கமறியலில் வைக்கமுடியும் என்பதே அரசாங்கத்தின் திட்டமாகும்.
அந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காகவே எனக்கெதிராக இரு
ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் என்னிடம் வாக்குமூலம் பெற்று அதன் பின்னர் கைது செய்வதே இதன் நோக்கமாகும்.