ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார். பொலநறுவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்ட வாறு கூறினார்.
மேலும், 2019 ஏப்ரல் முதல் 2024 செப்ரெம்பர் வரையிலான ஐந்தரை ஆண்டுகள் விசாரணை என்ற போர்வையில் தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் தகவல்களை மறைக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கத்துக்கோ 2019 நவம்பர் உருவாக்கப்பட்ட அரசாங்கத்துக்கோ இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை சட்டத்தின் முன்கொண்டு வருவதற்கான நோக்கம் இருக்கவில்லை. இந்த அரசாங்கங்களுக்கு உண்மையான சூத்திரதாரிகளை மறைக்க வேண்டிய தேவையே காணப்பட்டது.
தாக்குதல் இடம் பெற்று ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களே ஆகியுள்ள போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றும் பொறுப்புக்கூறவேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் – என்றும் கூறினார்.