அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான மீனவர்கள் 10 பேரில் ஒருவருக்கு 6 மாத கடூழியச் சிறைத் தண்டனையையும் 40 இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது ஊர்காவற்றுறை நீதிமன்றம். ஏனைய 9 பேரில் இருவர் முழுமையாக விடுவிக்கப்பட்டதுடன் 7 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 8 ஆம் திகதி படகுடன் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரின் வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த மாதம் 23 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நேற்று வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. நேற்று சிறைச்சாலை அதிகாரிகளால் 10 மீனவர்களும்
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
வழக்கை ஆராய்ந்த நீதவான் 10 பேரில் இருவர் சிறுவர்கள் என்பதால் அவர்களை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
அத்துடன் ஏனைய 8 பேருக்கம் ஆறு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடச் சிறை தண்டனை வழங்கி நிபந்தனயுடன் விடுதலை செய்தார்.
இந்த எட்டு பேரில் ஒருவர் படகோட்டி என்பதால் அவருக்கு ஆறு மாத கடூழியச் சிறைத்தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டது. அத்துடன் படகோட்டிக்கு 40 இலட்சம் ரூபா அபராதத் தொகையும் விதிக்கப்பட்டது. இதனைச் செலுத்த தவறின் மேலும் 3 மாதச்சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.