இலங்கை தொடர்பிலான பேரவைத் தீர்மானத்தினை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க அமெரிக்கா நடவடிக்கை!

இலங்கை தொடர்பிலான பேரவைத் தீர்மானத்தினை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க அமெரிக்கா நடவடிக்கை!

editor 2

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதித்தேர்தலின் பின்னரான நிலைவரங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் இடம்பெற்ற இச்சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்தது.

இதன்போது நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளடங்கலாக தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு, தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம், ஜனாதிபதித்தேர்தல் பெறுபேறுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து சுமந்திரனிடம் தூதுவர் ஜுலி சங் கேட்டறிந்தார்.

அதேபோன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சுமந்திரன், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல், புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்தல் என்பன உள்ளடங்கலாக சில நேர்மறையான வாக்குறுதிகளை இப்புதிய அரசாங்கம் வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அதற்குப் பதிலளித்த அமெரிக்கத்தூதுவர் தம்மிடம் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு அவசியமான தொழில்நுட்பங்கள் இருப்பதாகவும், அதனை அரசாங்கத்துக்கு வழங்கி உதவுவதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளமுடியுமா எனவும் இதன்போது அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சுமந்திரன், அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான சாதாரண பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தியினால் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நம்புவதாகவும், இருப்பினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்கத்தூதுவர், இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51ஃ1 தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி மேலும் ஒருவருடகாலத்துக்கு நீடிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகக் குறிப்பிட்டார்.

Share This Article