ஜனாதிபதியுடன் இணக்கம் எட்டப்படவில்லை என்கிறது பொதுஜன பெரமுன!

ஜனாதிபதியுடன் இணக்கம் எட்டப்படவில்லை என்கிறது பொதுஜன பெரமுன!

Editor 1

இடைக்கால ஜனாதிபதியாகவே ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தோம். ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியிடம் எந்தவிதமான இணக்கப்பாட்டையும் எட்டவில்லை என்று சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்தார்.

சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை பணிமனையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி தெரிவித்தார்.

மேலும், அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்படும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைத்தோம். இருப்பினும், ஜனாதிபதி சாதகமான பதிலை இதுவரை குறிப்பிடவில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தினால் அரசியலில் வீரவசனம் பேசும் தரப்பினரின் உண்மை முகம் வெளியாகும். பொதுத் தேர்தல் நடைபெற்றால் சிறந்த அரசியல் சூழல் ஏற்படும். இதன் காரணமாகவே பொதுத்தேர்தலை கோருகிறோம்.

எதிர்வரும் ஜூலை மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று முன்னாள் ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டமை அவரின் தனிப்பட்ட கருத்தே தவிர, கட்சியின் நிலைப்பாடல்ல. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் பற்றி கட்சியின் நிலைப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு
அறிவிப்பார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இடைக்கால பதவிக்காகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை தெரிவு செய்தோம். 2022ஆம் ஆண்டு வரை இன்று வரை அவருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுகளில் ஈடுபடவில்லை. எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை – என்றார்.

Share This Article