போர் காலத்தில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்கான ஆவணங்களை உரியவர்கள் உறுதிப்படுத்தினால் அவர்களுக்கு நகைகள் வழங்கப்படும். ஆவணங்களை உறுதிப்படுத்தாவிடின், அந்த நகைகளில் ஒருதொகை வடக்கு பொது அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும். இதற்கு பொது நிதியம் ஒன்றும் நிறுவப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ‘வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை உரியவர்களுக்கு வழங்க வேண்டும்’, என்று கோரியிருந்தார்.
அவருக்கு பதிலளித்த பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தவை வருமாறு,
போரின்போது வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய சட்ட நடவடிக்கைகள் ஊடாக பொலிஸ்
திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த தங்க நகைகள் போர் காலத்தில் வடக்கிலிருந்து கைப்பற்றப்பட்டன.
இந்தத் தங்க நகைகள் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை பெற்றுக் கொள்வது அவசியமாகும். அறிக்கை கிடைத்ததன் பின்னர், அவற்றை
உரியவர்களுக்கு ஒப்படைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
போரால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நகைகளுக்கான உரித்தை உறுதிப் படுத்துவதில் சிக்கல்கள் காணப்படும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
பொதுமக்களால் உரித்தை உறுதிப்படுத்த முடியாத தங்க நகைகளை வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பயன்படுத்தும் வகையில் பொது நிதியம் ஒன்றை நிறுவ உத்தேசித்துள்ளோம்.
வடக்கு அபிவிருத்திக்கு இந்த தங்க நகைகளில் ஒரு தொகையும், அரசாங்கத்தால் ஒரு தொகையும் வைப்பிலிடப்படும். வெளிநாடுகளில் வாழும்
தமிழர்கள் இந்த அபிவிருத்தி திட்டத்தில் பங்குப்பற்றுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்படும் – என்றார்.