இராணுவத்தினரின் உழவியந்திரத்தில் வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்று விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆலயத்தின் நிர்வாகனத்தினரும் அங்கு பிரசன்னமாகியிருந்ததுடன், இது தங்களது இடம் என பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அதனை மறுத்த ஆலய நிர்வாகத்தினர் இது தமது மூதாதையர்களால் பூர்வீகமாக வழிபடப்பட்டு வந்த பிரதேசம் என தெரிவித்திருந்ததாகவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஆலயச் சூழலில் படைத்தரப்பினரும் பௌத்த பிக்குகளும் பாதணிகளுடன் காணப்பட்டமை இந்துக்கள் மத்தியில் கவலையைத் தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.