சனல் 4 குற்றச்சாட்டுக்கள்; தெரிவுக்குழு ஒன்றை அமைக்க வலியுறுத்தல்!

editor 2

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட தெரிவுக் குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இணைந்து சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளதாக சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி பாரிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக தெரிவு குழுவொன்றை அமைக்குமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரினால் சபாநாயருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தெரிவுக்குழு அமைக்கப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்படும். அதற்கமைய தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதன்மூலம் ஜனாதிபதி ஆணைக்குழு, நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஆகியவற்றைப் பெற்று அவற்றை ஆராய்ந்து அதனை சாட்சிகளாக மாற்ற முடியுமென்றால் சட்டமா அதிபர் ஊடாக அதற்கான நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு,பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆகியன மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கிடையாது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைப்பது காலத்தை இழுத்தடிக்கும் ஒரு செயற்பாடாகவே அமையும்.முறையான விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால் எதிர்வரும் காலங்களில் இலங்கை இரண்டு சர்வதேச விசாரணைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்க தீரமானிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவில் 11 பேர் உள்ளடங்குவார்கள்.

இந்த தெரிவுக்குழு 2 மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

Share This Article