பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஏற்க முடியாது – கூட்டமைப்பு!

editor 2

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செல்லும் இடங்களில் ஜனநாயகம் பற்றி பேசி விட்டு, ஜனநாயக மரபுகளை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளை தேசிய மட்டத்தில் முன்னெடுத்துள்ளார். சுதந்திரமாக போராட்டத்தில் ஈடுபடும் உரிமையை முடக்கும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை ஏற்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டு அதற்கான வர்த்தமானி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை ஆராயும் போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத சட்டத்துக்கும் வர்த்தமானிக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் ஏதும் கிடையாது.

சுதந்திரமாக ஜனநாயக ரீதியில் போராடுவதை கட்டுப்படுத்தும் செயற்பாடாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. தமிழ் மற்றும் சிங்கள மக்கள் எதிர்க்கின்றனர்.

மீண்டும் அடக்குமுறைகளை கொண்டு வரும் சட்டமாகவே இது காணப்படுகிறது. ஆகவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் ஜனநாயக மரபுகளை ஒழிக்கும் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான நிலைமை இங்கே இருக்கக் கூடாது என்பதே எங்களின் எண்ணமாக உள்ளது.

ஜனாதிபதி செல்லும் இடமெல்லாம் ஜனநாயகம் தொடர்பாக பேசிக்கொண்டு இவ்வாறு ஜனநாயகத்தை அடக்கும் நடவடிக்கைகள் எந்த வகையில் நியாயமானதாக இருக்கும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஆனால் அரசாங்கமோ அதனை நீக்கி அதற்கு இணையான சட்டத்தை கொண்டுவருவதாக கூறுகின்றது.

யுத்தம் இல்லாத நிலைமையில் பயங்கரவாத தடைச் சட்டம் என்பது நிலைமையில் அவசியமானது அல்ல. இதனால் அதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

திருகோணமலையில் எமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவர் ஜனநாயக போராட்டத்திலேயே ஈடுபட்டார்.

திலிபனும் ஜனநாயக ரீதியில் உண்ணாவிரதம் இருந்தே மரணித்தார். இவ்வாறான நிலைமையில் குறித்த தாக்குதல் சம்பவம் போன்றவையே இன முறுகல்களை ஏற்படுத்தும். இதனால் ஜனநாயக ரீதியிலான விடயங்களுக்கு இடமளிக்க வேண்டும் என்றார்.

Share This Article