புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரியவருகின்றது.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன கடந்த மார்ச் 26 ஆம் திகதியன்று ஓய்வுபெறவிருந்தார். எனினும், அவருக்கு மூன்று மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.
அடுத்த பொலிஸ்மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களான தேசபந்து தென்னக்கோன், நிலந்த ஜயவர்தன, லலித் பத்திநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, புதிய பொலிஸ்மா அதிபர் தொடர்பில், ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் அவருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் எனக் கூறினார்.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபர் ஆவார். அவர் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.