முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மட்டுப்படுத்தவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க ஜனாதிபதி உரிமை சட்டம் மற்றும் 1977ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதிய சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை மட்டுப்படுத்த இரு வரைவு சட்டமூலங்களை வகுக்க சட்ட வரைவாளர்களுக்கு அறிவுறுத்துவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
புதிதாக வரையப்படும் சட்டமூலங்களில் முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் குடும்பத்தவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் (05 ஆண்டுகள்) முடிந்த பிறகு அவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கலும் நிறுத்தப்படவுள்ளன.
அரசாங்கத்தின் ‘வளமான நாடு; அழகான வாழ்க்கை’ என்ற கொள்கை பிரகடனத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய இந்த சட்டவரைவுகள் நிறைவேற்றப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.