இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ரெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தினருக்கும் இடையே ஏற்கனவே உடன்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தங்களுக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதன்படி, யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் தெரிவின் போது, ஏலவே இணங்கிய அடிப்படையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி செயற்படுமாயின், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு இடம்பெறாவிட்டால், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியுடனான சகல இணக்கப்பாடுகளும் நீக்கப்படும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.