வட – கிழக்கு மாகாணங்களின் நிரந்தர வீட்டுத் திட்டத்துக்கான நிதியை அதிகரிக்க அனுமதி!

வட - கிழக்கு மாகாணங்களின் நிரந்தர வீட்டுத் திட்டத்துக்கான நிதியை அதிகரிக்க அனுமதி!

editor 2

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரால் இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டுத் திட்டத்துக்காக வழங்கப்படும் நிதியை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த போரால் பலர் வீடுகளை இழந்தனர் – சேதங்களை சந்தித்தனர்.

இந்த நிலையில், இந்த மாகாணங்களில் 2009ஆம் ஆண்டு முதல் 2 இலட்சத்து 74 ஆயிரத்து 728 குடும்பங்களை சேர்ந்த 9 இலட்சத்து 14 ஆயிரத்து 722 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

2024 ஆம் ஆண்டின் இறுதியில் வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்து 488 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகளை நிர்மாணிக்க இலங்கை, இந்திய அரசுகள், அரச சார்பற்ற அமைப்புகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் மூலம் நிதி வழங்கப்படுகிறது.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களில் மேலும், 16 ஆயிரத்து 759 வீடுகள் நிர்மாணிக்கப்படவேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வீடு நிர்மாணிக்கும் திட்டத்தின்கீழ் முன்னர் 550 சதுர அடி வீடு அமைப்பதற்கு 11 இலட்சம் ரூபாயும் 340 சதுர அடி வீட்டுக்கு 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் மதிப்பீடு செய்யப்பட்ட தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.

எனினும், நிர்மாண மூலப்பொருட்களின் விலை உயர்வுக்கு அமைய 550 சதுர அடி வீடு அமைப்பதற்கு 15 இலட்சம் ரூபாயும் 340 சதுர அடி வீடு அமைக்க 9 இலட்சம் ரூபாயும் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Share This Article