முல்லைத்தீவு குருந்தூர்மலையின் கீழ் உள்ள சொந்த நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது கடந்த மே 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகள் இருவரையும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளது.
குருந்தூர் மலை பௌத்த பிக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் தொல்லியல் பூமியை சேதப்படுத்தினார்கள் என்ற குற்றம்சாட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இன்றைய வழக்கு விசாரணையில், நீதிபதி ரீ. பிரதீபன் அவர்கள் தனது கட்டளையில், குறித்த சந்தேகநபர்கள் மீது வழக்கை தொடர்ந்து நடாத்தக்கூடிய அடிப்படை முகாந்திரங்கள் இல்லை எனவும், குறித்த பிரதேசம் இன்னமும் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய பிரதேசம் என வர்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்பதை வழக்குத்தொடுனர்தரப்பே ஏற்றுக்கொண்டதையும் விசேடமாகக் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் இன்றையதினம் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தின் பத்திற்கும் அதிகமான சட்டத்தரணிகள் விவசாயிகள் சார்பாக தோன்றி வாதிட்டார்கள்.