இன்றும் பலத்த மழை!

இன்றும் பலத்த மழை!

editor 2

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். 

வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலுமான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வரையில் வீசக்கூடும் எனவும், காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

சிலாபத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரையிலும் அதிகரிக்கக்கூடும். 

எனவே, மறுஅறிவித்தல் வரை, குறித்த கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமெனக் கடற்படை மற்றும் மீனவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Share This Article