அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக சுமார் 70 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சில தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என அஞ்சல்மா அதிபர் பி.சத்குமார தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்து தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
10 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பானது இன்று நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.
இன்று கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்று விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று நள்ளிரவுடன் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்தாலும் தமக்கான உரியத் தீர்வு வழங்கப்படாத பட்சத்தில் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.