பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில், கனடாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தோற்றம் பெறுமாயின், அதன் விளைவாக ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்பில் கனேடிய அரசு நடவடிக்கை எடுக்குமாயின், அதனையும் ‘இனப்படுகொலை’ என்று வகைப்படுத்துவீர்களா? என கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து விஜயதாஸ ராஜபக்ஷவினால் ஹரி ஆனந்தசங்கரிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த அரசாங்கத்தில் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராகப் பதவி வகித்த நான், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டேன்.
இலங்கையில் சுபீட்சத்தையும், புரிந்துணர்வையும் கட்டியெழுப்பும் நோக்குடனேயே உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகின்றேன்.
முதலாவதாக கனடாவின் அரசியலில் உச்சத்தை எட்டியிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்தினைக் கூறுகின்றேன்.
இலங்கையில் சகல சமூகங்களினதும் மதிப்பைப்பெற்ற தமிழ் அரசியல்வாதியான வீ.ஆனந்தசங்கரியின் மகனான உங்களது அமைச்சு நியமனம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
உங்களது தந்தையின் சார்பில் 2002 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜரான நான், தமிழர் ஐக்கிய விடுதலைக்கூட்டணியின் தலைவராக அவர் பதவி வகிப்பதை வெற்றிகரமாக நியாயப்படுத்தி வென்றேன்.
அதேபோன்று 2004 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, அவர் தப்பி வந்து எனது வீட்டில் தஞ்சம் புகுந்தார்.
அவருக்குப் பாதுகாப்பு அளித் நான், அவரை அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் அழைத்துச்சென்றேன்.
எனது வேண்டுகோளின்படி அவர் உங்களது தந்தைக்கு அரச பாதுகாப்பு வழங்கியதுடன், அது சுமார் இரு தசாப்தங்கள் வரை தொடர்ந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையகாலங்களில் வெளியிடப்பட்டுள்ள சில கருத்துக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒரு முன்னுதாரணமாகக் காண்பிக்கும் வகையிலான செயற்பாடுகள் தொடர்பில் நான் மிகுந்த அதிருப்தி அடைகின்றேன்.
தமிழீழ விடுதலைப்புலிகளால் சுமார் 60,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், அவர்களில் சுமார் 27,000 க்கும் மேற்பட்டோர் இராணுவத்தினராவர்.
அதுமாத்திரமன்றி முக்கிய தமிழ் அரசியல் தலைவர்கள், சமூகத்தலைவர்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர்.
பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில், கனடாவில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தோற்றம் பெறுமாயின், உயிரிழப்புக்கள் தொடர்பில் கனேடிய அரசு நடவடிக்கை எடுக்குமாயின், அதனையும் ‘இனப்படுகொலை’ என்று வகைப்படுத்துவீர்களா? இல்லை எனில், இலங்கை மீது அதனை ஒத்தவகையில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தீவிர கரிசனைக்குரியதாகும்.
தற்போது இலங்கைக்கு தூரநோக்கு சிந்தனையும், கருணையும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில வெளிநாட்டுத்தரப்புக்களின் சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடுகள் உள்நாட்டு நிலைவரத்தை மேலும் மோசமாக்குகின்றன.
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் ஆகியோர் இந்தத் துருவமயமாக்கலுக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர்.
அதற்குக் காரணம் தமிழ் சமூகத்தின் மீதான அக்கறை அல்ல. மாறாக அரசியல் ரீதியான நோக்கங்களும், தேர்தல் அடைவுகளுமே அதற்குக் காரணமாகும் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.