உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழுமையான இணக்கம் எட்டப்படவில்லை.
கொள்கை இணக்கப்பாடு அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியதோடு தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற சபைகளில் தாங்கள் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் முழுமையான இணக்கப்பாடுகள் எட்டாத நிலையில் காணப்பட்டதோடு மீண்டும் சந்தித்து உரையாடுவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
வட, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (30) மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது வட, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இச்சந்திப்பின்போது வட, கிழக்கு மாகாணங்களில் சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் ஆட்சியமைப்பது அவசியம் என தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டதாகவும், அதன்படி தமது இரு கட்சிகளும் ஒத்துழைப்புடன் இணைந்து செயற்பட்டால் அவ்விரு மாகாணங்களிலும் கணிசமான சபைகளில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றமுடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளிக்கையில், இருதரப்பினருக்கும் இடையில் கொள்கை ரீதியில் இணக்கப்பாடு எட்டப்படும் பட்சத்தில் இணைந்து ஆட்சியமைக்க முடியும் எனவும், மாறாக வெறுமனே தேர்தலை இலக்காகவைத்து சபைகளையும், பதவிகளையும் கைப்பற்றுவதற்காக மாத்திரம் கூட்டிணையவேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனவும் எடுத்துரைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தமிழ்த்தேசியத்தைப் பாதுகாப்பதற்கே தமிழ்மக்கள் ஆணை வழங்கியிருப்பதாகவும், எனவே தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி வாக்கு கோரிய சகல கட்சிகளும் அதனைப் பாதுகாத்து நடைமுறைப்படுத்தும் வகையில் இணைந்து செயற்படவேண்டும் எனவும் தான் தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியதாக கஜேந்திரகுமார் கூறினார்.
இதேவேளை இச்சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஏற்கனவே இரு கட்சிகளாலும் வெளியிடப்பட்ட நிலைப்பாடுகளுக்கு அமைய ஒவ்வொரு சபைகளிலும் கூடுதல் ஆசனங்களைப்பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கும், மற்றைய கட்சி அதற்கு ஆதரவு அளிப்பதற்கும் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவித்தார்.