படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்துத் தெரிவித்திருந்தார்.
சட்ட மா அதிபருக்கு எதிராக நாடாளுமன்றம் அரசியல் குற்றவியல் பிரேரணையை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்து பிரதமருக்கு லசந்த விக்கிரமதுங்கவின் மகள் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
லசங்த விக்கிரமதுங்கவின் கொலை சம்பவத்தில் தற்போது அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை தெளிவுபடுத்துமாறும் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அனுப்பிவைத்துள்ள கடிதத்தை தொடர்ந்து எவ்வாறான நடவடிக்கைகளை பிரதமர் முன்னெடுத்துள்ளார் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வினவியிருந்தார்.
இதேநேரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்திருந்தார்.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படு கொலை சம்பவத்திற்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பல சாட்சியங்கள் உள்ளதாகவும் தாமும் அதற்குரிய பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அரசாங்கம் இந்த விடயத்தில் தெளிவாக உள்ளதாகவும் நீதியைப் பெற்றுக்கொடுக்க தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
லசந்த விக்கிரமதுங்கவின் மகள் முன்வைத்த கோரிக்கையை தாம் விளங்கிக்கொள்வதாகவும் கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
சட்ட மா அதிபர் திணைக்களம் சுதந்திரமாக செயற்பட வேண்டும் எனவும் இந்த கொலைச் சம்பவத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
நீதியைப் பெற்றுகொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதாகவும் மீண்டும் இது தொடர்பிலான விடங்களை ஆராய்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும் புதிய அணுகுமுறைகளை செயற்படுத்துவதாகவும் புதிய சாட்சிகளை விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சுட்டிக்காட்டிய பிரதமர் 20 சாட்சியங்கள் ஏற்கனவே உள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் உட்பட பல்வேறு தரப்பினர் இதற்காக உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.