படகு விபத்தில் உயிரிழந்த மீனவரின் சடலம் இராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது!

படகு விபத்தில் உயிரிழந்த மீனவரின் சடலம் இராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது!

editor 2

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்பில் படகு கவிழ்ந்து கடலுக்குள் மூழ்கி உயிரிழந்த மீனவரின் சடலம் இன்று சனிக்கிழமை (03) அதிகாலை கடல் வழியாக இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்ற விசைப்படகு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவர்களை கைதுசெய்ய இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் சென்ற நிலையில், அங்கு ஏற்பட்ட விபத்தையடுத்து மீன்பிடி படகிலிருந்து மலைச்சாமி (59) என்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்ததுடன், இராமச்சந்திரன் (64) என்ற மீனவர் கடலில் மூழ்கி மாயமாகி உள்ளார்.

மேலும், முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய மீனவர்கள் இருவர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை (02) மதியம் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய மீனவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படாது யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், இரண்டாவது நாளாக நடுக்கடலில் மாயமாகிய மீனவர் ராமச்சந்திரனை தேடும் பணிகள் கடற்படை ஹெலிகொப்டர், கடலோர காவல்படையின் ரோந்து படகுகளின் மூலம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில், உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மலைச்சாமியின் உடலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனை செய்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து உயிருடன் மீட்கப்பட்ட மீனவர்கள் இருவர் மற்றும் மலைச்சாமியின் உடலை நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகில் அனுப்பி வைக்கப்பட்டது.

அனுப்பி வைக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் இறந்த மீனவரின் உடலை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்ஸ் பித்ரா கப்பலில் ஒப்படைக்கப்பட்டது.

உடலை பெற்று கொண்ட இந்திய கடற்படை வீரர்கள் இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு எடுத்துச் சென்று இராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

உயிருடன் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்கு பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மலைச்சாமியின் உடல் ஆம்பியூலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டு அவரது வீட்டில் ஒப்படைக்கபட்டது.

கடலில் காணாமல் போன மீனவர் இராமசந்திரனை இலங்கை கடற்படை தேடி வருவதாக உயிர் பிழைத்த மீனவர் தெரிவித்துள்ளார்.

Share This Article