யாழில் வாள்வெட்டு வன்முறை; ஒருவர் பலி!

யாழில் வாள்வெட்டு வன்முறை; ஒருவர் பலி!

editor 2

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் இரண்டு தரப்புகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இருபாலை மடத்தடி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

குறித்த பகுதியில் நேற்று முற்பகல் கோப்பாய் பொலிஸாரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இந்தநிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகத் தெரிவித்துக் குறித்த 43 வயதுடையவர் மீது கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் தரப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பொதுமகன் பதில் தாக்குதல் நடத்தியதில் கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் தரப்பில் சிலர் காயமடைந்துள்ளனர்.

இது இரண்டு தரப்புகளுக்கு இடையேயான மோதலாக மாற்றமடைந்ததுடன், சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதாகக் கூறப்படும் குறித்த பொதுமகன் நேற்றிரவு தமது வீட்டுக்குச் சென்ற நிலையில், அவர் மீது கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் தரப்பினர் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்த குறித்த பொதுமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தாக்குதலை மேற்கொண்டவர்களில் பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share This Article