ஜனாதிபதித் தேர்தலை தடுக்கக் கோரும் மனு; விசாரணைக்கு எடுக்கிறது உயர் நீதிமன்றம்!

ஜனாதிபதித் தேர்தலை தடுக்கக் கோரும் மனு; விசாரணைக்கு எடுக்கிறது உயர் நீதிமன்றம்!

editor 2

ஜனாதிபதி பதவிக் காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கும் வரையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு எதிர்வரும் திங்கட்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த மனு இன்று உயர் நீதிமன்றில் பரீசிலிக்கப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணை செய்வதற்கு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவினால் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்ணாண்டோ, பிரித்தீ பத்ம சூரசேன, S.துரைராஜா இந்த ஆகியோர் இந்த நீதியரசர்கள் குழாமில் அடங்குவர்.

இலங்கையின் முக்கிய வர்த்தகர் ஒருவர் இந்த மனுவை நேற்று தாக்கல் செய்திருந்தார்.

19ஆம் திருத்தச் சட்டத்தில் நிலவும் குறைபாடு ஒன்றின் காரணமாக, ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் ஐயப்பாடு இருப்பதாக அண்மையில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதன்படி தற்போதுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் இன்னும் ஓராண்டுக்கு நீடிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த விடயத்தில் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் அறிவிக்கப்படும் வரையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

Share This Article