இலங்கை விவகாரம்; சர்வதேச நீதிமன்றுக்கு – பிரிட்டன் தொழிற்கட்சி உறுதி!

இலங்கை விவகாரம்; சர்வதேச நீதிமன்றுக்கு - பிரிட்டன் தொழிற்கட்சி உறுதி!

editor 2

இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த தயார் என்று பிரிட்டனின் தொழில்கட்சி உறுதிமொழி வழங்கியுள்ளது.

ஜூலை 4 ஆம் திகதி பிரிட்டனில பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள
நிலையில் கென்சவேர்ட்டிவ், தொழில்கட்சி மற்றும் பசுமை கட்சிகளின்
பிரதிநிதிகள் பிரிட்டனில் முதல் தடவையாக இடம்பெற்ற தமிழ்த் தேர்தல் மேடை
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் இலங்கையில் இடம்பெற்ற
பெரும் அநீதிகளுக்கு நீதி, பொறுப்புக் கூறலை உறுதி செய்வதை நோக்கிய
நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக உறுதியளித்துள்ளனர்.

தமிழ் கார்டியன், பிரிட்டிஷ் தமிழ் கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு வெஸ்ட்மினிஸ்டரில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பிரிட்டனின் பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் நாட்டுக்கான அவர்களின் தொலைநோக்கையும் பிரிட்டனின் தமிழ் சமூகத்துக்கான தங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் முன்வைத்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரத்தை கென்சவேர்ட்டிவ் கட்சி தொடர்ந்தும் எழுப்பும் என அந்தக் கட்சியின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரூ மிட்செல் தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரத்தை எழுப்புவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர் நாங்கள் நிச்சயமாக ஆராய்வோம். இங்குள்ள தமிழ்ச் சமூகத்தினர் அதற்கான அழுத்தங்களைக் கொடுத்தால் நாங்கள் நிச்சயமாக அதனைச் செய்வோம் – என்றார்.

இந்த நிகழ்வில் தடைகள் குறித்தும் ஆராயப்பட்டன.

தடைகள் குறித்து கருத்து தெரிவித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்ரூ மிட்செல் இராஜதந்திர நடவடிக்கை
களின் ஒரு வகையான பதிலே தடைகள் என குறிப்பிட்டதுடன் பிரிட்டன் அதனை பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தார்.

எனினும், முன்கூட்டியே தடைகள் குறித்து விவாதிப்பது தடைகள் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைக்கும் என்பதால் பிரிட்டன் அது குறித்து விவாதிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார பிரிட்டனின் கொள்கைகள் ஒருநாடு சார்ந்தது அல்ல என தெரிவித்த அவர் மாறாக குற்றங்களை அடிப்படையாக கொண்டவை எனவும் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் இலங்கை அலட்சியம் செய்யப்பட்டுள்ளது என நீங்கள் கருதக்கூடாது என கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர்
அன்ரூ மிட்செல் தெரிவித்தார்.

கனடா பாராளுமன்றம் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக நினைவுகூருவதைபோல பிரிட்டன் பாராளுமன்றம் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரூ மிட்செல் குறிப்பிட்ட நினைவுநாள் என்பது
இல்லை என்றாலும் கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்கள் மற்றும் அவர்களை தேடும் உறவுகளை தொடர்ந்தும் நினைவுகூருவதாக தெரிவித்தார்.

குறிப்பாக இனப்படுகொலை என்ற சொல் குறித்து மேலும் கேள்வி எழுப்பியபோது யூதர்கள் இனவழிப்பு ருவாண்டா படுகொலை நினைவுகூருவதில்
தனது பணியை நினைவுகூர்ந்தார்.

இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவது குறித்து நான் மிகவும் கவனமாக உள்ளேன். இனப்படுகொலை இடம்பெறுகின்றது என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்கின்றன.

பேரழிவு, அச்சத்தை ஏற்படுத்திய மோதல் இடம்பெற்றது. இதன்போது,
மிகப் பயங்கரமான செயல்கள் இடம்பெற்றதை – அவை பலரை அச்சத்துக்குள்ளாக்கியதை நாங்கள் கண்டோம். இது குறித்து எந்த சந்தேகமும் இல்லை. அதனை மறுக்கவும் முடியாது.

சுயநிர்ணய உரிமை குறித்து கருத்து தெரிவித்த அவர் சுதந்திரத்துக்கான
சர்வஜன வாக்கெடுப்பு குறித்து வேண்டுகோள்கள் காணப்படுகின்றன.

ஆனால், ஓர் அரசாங்க அமைச்சராக நான் மற்றுமொரு நாட்டின் இறையாண்மை முடிவுகளில் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதில் மிகவும் கவனமாகயிருக்க வேண்டும். நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை என்னால் கொடுக்க முடியவில்லை.

இலங்கைக்குள் நல்லிணக்கத்தை கொண்டுபோய் சேர்ப்பதில் நாங்கள் நல்ல சக்தியாக விளங்க முடியும்- என்றார்.

இதேவேளை, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என தொழில்கட்சியின்
ஆசியாவுக்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தை போல இல்லாமல் சர்வதேச சட்டத்தை எங்களின் வெளிவிவகார கொள்கையின் முக்கிய கருப்பொருளாக நாங்கள் பின்பற்றுவோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துவதில் பிரிட்டனின் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டும்- என்றார்.

Share This Article