நாட்டில் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக எலிக்காய்ச்சலால் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை யும் பாரியளவில் அதிகரித்துள்ளதுடன் பொதுமக்கள் எலிக்காய்ச்சல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு விசேட வைத்திய நிபுணர் துஷானி பெரேரா தெரிவித்துள்ளார்.
எலிக்காய்ச்சல் பரவல் குறித்து கடந்த புதன்கிழமை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
லெப்டோஸ்பைரா எனப்படும் ஒருவகை பற்றீரியா தொற்றால் இக்காய்ச்சல் ஏற்படுகிறது. நோய்த் தொற்றுக்கு ஆளான எலிகளின் சிறுநீர் மூலம் மனிதர்களுக்கு பரவுவதால் எலிக்காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. அண்மைகாலமாக நாட்டில் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் பாரியளவில் அதிகரித்துள்ளது. மழை மற்றும் பருவகால நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்படும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக இரத்தினபுரி குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற மாவட்டங்களில் தொடர்ச்சியாக அதிகளவான தொற்றாளர்கள் பதிவாவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. பற்றீரியா பரவியுள்ள நீர்நிலைகள், சதுப்பு நிலங்களில் நடமாடுதல், விளையாடுதல், பயிர்ச்செய்கை மற்றும் அகழ்வு பணிகளில் ஈடுபடுவதன் மூலம் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆகையால் பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் அவதானத்துடன் செயல்படுவது நல்லது. மேலும் சுற்றுலாவுக்காக செல்வோர் நீர் தேங்கியுள்ள பகுதிகள் மற்றும் பழக்கமில்லாத நீர்நிலைகளில் நீராடுதல், விளையாட்டு சாகசங்களில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளலாம்.
நோய் அறிகுறிகள் வெளிப்பட சுமார் 7 தொடக்கம் 14 நாட்களாகக் கூடும். ஆகையால் அதானம் மிக்க பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் விவசாயம், இரத்தினக்கல் அகழ்வு பணியை மேற்கொள்பவர்கள் காய்ச்சல்கள் ஏதும் ஏற்படின் உடனடியாக வைத்தியசாலையை நாடுவது நல்லது. நோய்த் தொற்றுக்கு ஆளானவரிடம் கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி, கண் சிவத்தல், வாந்தியும் குமட்டலும் போன்ற அறிகுறிகள் தென்படலாம். விவசாயிகளின் நலன் கருதி சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மூலம் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்படுகிறது. அவற்றை பொது சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய பெற்றுக் கொள்ளலாம் என்றார்.