யாழ். மாநகர சபையில் முதல்வர் வேட்பாளர்கள் மூவர்!

யாழ். மாநகர சபையில் முதல்வர் வேட்பாளர்கள் மூவர்!

editor 2

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய முதல்வரை தெரிவு செய்வதற்கான போட்டியில் மூன்று கட்சிகளிலிருந்து வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். 

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான அமர்வு நாளையதினம் யாழ்ப்பாண மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

45 உறுப்பினர்களை கொண்ட யாழ்ப்பாண மாநகர சபையில் 23 ஆசனங்களை கொண்டிருக்கும் தரப்பே ஆட்சியமைக்க முடியும். 

எனினும், எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை கொண்டிருக்காத நிலையில் கட்சிகள் கூட்டணிகளை அமைத்து ஆட்சியை கைப்பற்ற முயற்சித்து வருகின்றன. 

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றின. 

இந்த நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் பதவிக்காக போட்டியிடவுள்ளன. 

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரையும், பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளனின் பெயரையும், பரிந்துரைக்க அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது. 

இலங்கை தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளரை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளரை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஆதரிக்கும். 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் முதல்வர் பதவிக்கு கனகையா ஸ்ரீ கிருஷ்ணாவும், பிரதி முதல்வர் பதவிக்கு துரைராஜா ஈசனும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் முதல்வர் பதவிக்கு சுந்தரமூர்த்தி கபிலன் போட்டியிடுவார் என அந்தக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Share This Article