சர்வதேசம் முன்வைத்துள்ள மனித உரிமைகள் கரிசனைகள் விடயத்தில் இலங்கை தடுமாறி வரும் நிலையில், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அவரின் வருகை இந்த மாத இறுதியில் அல்லது ஜூலையில் நிகழும் என்று வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. எனினும், அவர் இலங்கை வரும் திகதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரியவருகிறது.
ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், 9 வருடங்களின் பின்னர் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.
முன்னதாக, கடந்த 2016 பெப்ரவரியில் அப்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் செய்யீத் அல்-ஹூசைன் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
பொறுப்புக்கூறலில் காணப்படும் இடைவெளியை நிரப்பவும், நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறவும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பயங்கரவாத தடை சட்ட பயன்பாட்டை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் சர்வதேசம் முன்வைத்துள்ள மனித உரிமைகள் கரிசனைகள் விடயத்திலும் இலங்கை தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.
அத்துடன், போர் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல், மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் ஆணையாளரின் பணிமனை உருவாக்கிய பொறுப்புக்கூறல் திட்டத்துக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையிலேயே ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கை வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.