பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமை பணிமனையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சி. ஐ. டியினர் அதனை பலமணிநேரம் சோதனையிட்டனர்.
நேற்று முற்பகல் 11 மணிக்கு கட்சி பணிமனை சி. ஐ. டியினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவும்கூட சி. ஐ. டியினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
மட்டக்களப்பு, முதலாவது வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமை பணிமனையே இவ்வாறு சோதனையிடப்படுகிறது.
பணிமனைவளாகத்தின் நிலப்பகுதியும் துளையிடப்பட்டு சோதனை முன்னெடுக்கப்படுகிறது என்றும் தெரிய வருகிறது.
கொழும்பிலிருந்து வந்த சி. ஐ. டியினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
மேலும், கட்சிப் பணிமனைக்குள் இருந்தவர்களின் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்ததுடன், அவர்களை அங்கேயே தடுத்தும் வைத்துள்ளனர் என்றும் தெரிய வருகிறது. இதேநேரம், கட்சி பணிமனைக்கு செல்வதற்கு வேறு நபர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு. ரவீந்திரநாத் கடந்த 2006 டிசெம்பர் 15ஆம் திகதி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு சென்றபோது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக பிள்ளையான் என்று அறியப்பட்ட சி. சந்திரகாந்தன் கடந்தஏப்ரல் 8ஆம் திகதி குற்றப் புலனாய்வு
பிரிவினரால் கடந்த பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு
தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.