இந்தியா என்பது உலகிலுள்ள மிகப்பெரிய நாடுகளில் நான்காவது இடத்திலுள்ள நாடாகும். எனவே அந்த நாடு வளர்ச்சியடைவதற்கு இலங்கை போன்ற மிகச் சிறிய நாடுகளின் அரசியலில் தலையிட வேண்டியேற்படும் என்று நான் எண்ணவில்லை.
இந்தியாவுக்கு அதற்கான தேவைப்பாடும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொனசேக்கா தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (02) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் விலை திருத்தங்கள் வழமையாக இடம்பெறுபவையாகும். எனவே அவற்றை பத்திரைககளில் பிரதான செய்தியாக பிரசுரித்து அரசாங்கம் பிரசாரத்தை மேற்கொள்வதால் பிரயோசனமில்லை.
மக்களால் இவற்றை நன்கு உணர்ந்து கொள்ள முடியும். நாட்டைக் கட்டியெழுப்புவதில் இவை தாக்கம் செலுத்தப் போவதில்லை.
நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில் கட்சிகளுக்கு முக்கியத்துவமளிக்காது பொறுத்தமானவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டும்.
இந்தியா போன்ற பாரிய நாடுகளுடன் செய்து கொள்ளப்படும் பொருளாதார ஒப்பந்தங்கள் எம்மைப் போன்ற மிகச் சிறிய நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது. எமது வீழ்ச்சி எந்த வகையிலும் அந்த நாட்டையும் பாதிக்காது.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஒரு கடலில் நெத்தலி மீனைப் போன்றது.
எனவே இந்தியா – பாக்கிஸ்தான் மோதல் ஏற்பட்டால் அது எமது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தாது.
காரணம் இப்போதும் இலங்கை செல்வந்த நாடல்ல. மக்கள் மூன்று வேளை உணவை உண்பதற்கு கூட சிரமத்தையே எதிர்கொள்கின்றனர்.
இது வரலாற்று ரீதியாக எமது நாட்டில் காணப்படும் பிரச்சினையாகும்.
இந்த நிலைமையிலிருந்து இலங்கை மீட்சியடைந்தால் சிறப்பு. ஆனால் அதற்கான எந்த சமிஞ்ஞையும் இதுவரையில் தென்படவில்லை.
இலங்கை மக்கள் இன்னும் அனுபவிப்பதற்கு என்ன துயரம் இருக்கிறது? அனைத்தையும் எமது மக்கள் பார்த்து விட்டனர். எந்த நாட்டுடன் எந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டாலும் இலங்கையின் இறையான்மை பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்தியா என்பது உலகிலுள்ள மிகப்பெரிய நாடுகளில் நான்காவது இடத்திலுள்ள நாடாகும்.
எனவே அந்த நாடு வளர்ச்சியடைவதற்கு இலங்கை போன்ற மிகச் சிறிய நாடுகளின் அரசியலில் தலையிட வேண்டியேற்படும் என்று நான் எண்ணவில்லை. அவர்களுக்கு அதற்கான தேவைப்பாடும் இல்லை என்றார்.