வவுனியா தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற, இரட்டைக் கொலைச் சம்பவம்
தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவருக்கு பிணை வழங்கி, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் உத்தரவிட்டார்.
வவுனியா தோணிக்கல் பகுதியில், 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை, வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில், கணவன், மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேர் வவுனியா
பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், அவர்கள், நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் முதலாம், மூன்றாம், நான்காம், ஆறாம், ஒன்பதாம் இலக்க சந்தேக நபர்கள் 5 பேருக்கும், நிபந்தனைகளுடன் கூடிய பிணைவழங்கப்பட்டது.