திருவள்ளுவர் கலாசார மண்டபம் கை மாறுகிறதா?

திருவள்ளுவர் கலாசார மண்டபம் கை மாறுகிறதா?

editor 2

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை,
யாழ்ப்பாணம் மாநகர சபை எதிர்காலத்தில் இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் பராமரிப்புக்குரிய பொறுப்பை இந்திய அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு ஏற்றிருந்த நிலையில் அதில் 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் யாழ். மாநகர சபை அதனை நிர்வகிப்பதற்கான ஒழுங்குகளை முன்னெடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் நா. வேதநாயகன் குறிப்பிட்டார்.

எவ்வளவு விரைவாக இதனை மாநகரசபையே பொறுப்பேற்று இயக்க முடியுமோ அதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.

இதன்போது, யாழ். இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி கருத்து வெளியிடுகையில், இந்தக் கலாசார மண்டபத்தை இயக்குவதற்கான இணை முகாமைத்துவ குழுவின் கூட்டம் 2023 ஆம்ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் நடத்தப்படவில்லை.

அது எவ்வளவு விரைவாக இடம்பெறுகின்றதோ, அதற்கு அமைவாகவே
ஏனைய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க முடியும். எதிர்காலத்தில் இணை முகாமைத்துவ குழுவை உள்ளூரை மையப்படுத்தியதாக உருவாக்குவது
சிறப்பாக இருக்கும் என்றும், அத்துடன் இந்தியத் தூதரகம் ஆலோசனை வழங்கும் ஒரு தரப்பாகவே எதிர்காலத்தில் இருக்கும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், கலாசார மண்டபத்தின் ஒவ்வொரு மாடிக் கட்டடத் தொகுதிக்குமான பல்வேறு விதமான முன் மொழிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இது
சாதகமானதொரு நிலைமை என்றும் அவர் கூறினார்.

தற்போது இந்தியத் தூதரக அதிகாரிகளே பராமரித்து வரும் நிலையில் நிர்வாக
நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்துவதற்காக யாழ்.மாநகர சபையால் அதிகாரிகளை நியமிக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

மேலும், இணை முகாமைத்துவக் குழுவின் கூட்டத்தை விரைவாக கூட்டுவதற்கு ஏதுவாக மத்திய அரசாங்கத்தின் கலாசார அமைச்சுக்கு உடனடியாகக் கடிதம்
அனுப்புமாறும் ஆளுநர் பணித்தார்.

கலாசார மண்டபம் யாழ். மாநகர சபையால் முழுமையாக இயக்கப்பட்ட
பின்னர் அதில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பான திட்டமிடல்களை முன்னெடுக்கலாம் என இந்தியத் தூதரக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன்,
வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) எஸ். குகதாஸ், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, யாழ். மாநகர சபை ஆணையாளர் ச. கிருஷ்நேந்திரன் மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share This Article