மட்டக்களப்பு நீதிமன்றில் ஆவணங்களைத் திருடிய குற்றச்சாட்டில் இருவருக்கு விளக்கமறியல்!

editor 2

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதிவேட்டு அறையில் இருந்து வழக்கு ஆவண கோப்பு ஒன்றை திருடி அதிலிருந்த வாகனப் பதிவு ஆவணத்தை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றி திரும்பவும் பதிவேட்டு அறையில் வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட நீதிமன்ற சிற்றூழியரையும் மணல் வியாபாரி உட்பட இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் கடந்த திங்கட்கிழமை (7) உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் பதிவேட்டு அறையில் வைக்கப்பட்டிருந்த 4 ஆவணக் கோப்புக்கள் கொண்ட ஆவணங்கள் திருடுபோனதையடுத்து பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில், திருடுபோன வாகன வழக்கு தொடர்பான ஆவணக் கோப்பு அடங்கிய ஆவணங்களை அங்கு கடமையாற்றி வந்த ஊழியர் ஒருவர் மணல் வியாபாரியுடன் இணைந்து அங்கிருந்து திருடிச் சென்றதாகவும், பின்னர், அந்த ஆவணக் கோப்பில் இருந்த ஆவணங்களை எடுத்துவிட்டு, தனது பெயருக்கு மாற்றப்பட்டதற்கான வாகன பதிவு ஆவணங்களை கோப்பில் இணைத்து, மீண்டும் பதிவேட்டு அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிமன்ற ஊழியரையும் மணல் வியாபாரியையும் கடந்த மார்ச் 12ஆம் திகதி பொலிஸார் கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

அதனையடுத்து அவர்களை கடந்த 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதற்கிணங்க, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மீண்டும் வழக்கு விசாரணைக்காக கடந்த 7ஆம் திகதி நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையான 14 நாட்களுக்கு விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.

Share This Article