போலி விஸாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மனைவியும் 40 வயதுடைய கணவனுமே கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் இருவரும் ஜப்பானின் நரிட்டா நகரத்துக்குச் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு 08.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்கள் இருவரும் சோதனை நடவடிக்கைகளுக்காக தங்களது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர்களின் ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அதனை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது, விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்களின் கனடா விஸா போலியாக தயாரிக்கப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் மேற் கொள்ளப்பட்ட விசாரணைகளில்,
தரகர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபா தருவதாகக் கூறி இந்த போலி கனடா விஸாவை தயாரித்துள்ளதாகவும், ஜப்பானின் நரிட்டா நகரத்துக்குச் சென்று பின்னர் அங்கிருந்து கனடாவுக்கு தப்பிச் செல்ல தயாராக இருந்துள்ளதாகவும்
தெரியவந்துள்ளது.