உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அரலகங்வில மகாவலி கலையரங்கில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய :
இந்த அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட, மக்களால் பாதுகாக்கப்படும் அரசாங்கம், நாட்டில் மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் கடந்த தேர்தலில் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எமது அரசுக்கு உள்ளது. அதற்காக அனைத்து துறைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரவுகளின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்க அரசு சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு கணிசமான பங்களிப்பை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னைய அரசுகளின் கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளில் ஆசிரியர்களுக்கான சரியான திட்டம் இருக்கவில்லை. ஆசிரியர்களின் மனப்பான்மையை வளர்ப்பதிலும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதிலும், நவீன கல்வி அறிவை அவர்களுக்கு வழங்குவதில் எமது அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இதுவரை காலமும் அரசியல் செல்வாக்கு காரணமாகவே ஆசிரியர்கள், அதிபர்கள், நியமனங்கள், இடமாற்றங்கள் இடம்பெற்று வந்தன. அந்த நிலை மீண்டும் ஏற்படாது. இன்று அரச அதிகாரிகள் அரசியல் செல்வாக்கு இன்றி மகிழ்ச்சியுடன் கடமையாற்றி வருகின்றனர். ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் என ஏராளமான வெற்றிடங்கள் உள்ளன. சில இடமாற்றங்கள் முறையாக நடைபெற்றிருக்கவில்லை. இவற்றுக்கு தீர்வு காணப்பட்டு எதிர்காலத்தில் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் பாடசலைகளுக்கு வழங்கப்படுவர்.
நான் குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்திற்கு இந்த பிரதேசத்தின் கல்வி நிலைமையை அறிந்து கொள்வதற்காக வந்தேன். சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லை. உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஆனால், பொலன்னறுவை நகருக்குச் செல்லும் போது, பல வசதிபடைத்த பாரிய கட்டிடங்கள் உள்ளன. பொலன்னறுவையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு சுமார் ஆறாயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் பாடசாலை மாணவர்களுக்கு முறையான கழிப்பறை வசதிகள் கூட செய்துகொடுக்கப்படவில்லை. இந்நிலை மாற வேண்டும். 2026 ஆம் ஆண்டில் நாம் மேற்கொள்ளவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக, இந்நாட்டின் சகல பிள்ளைகளும் எதிர்காலத்தில் நம்பிக்கை வைக்கக்கூடிய திறன்களுடனும் பலத்துடனும் சமூகத்தில் பிரவேசிக்கும் கல்வி முறையை நாட்டில் உருவாக்குவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய பொலன்னறுவை மாவட்ட தலைவரும், வீடமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான டி.பி. சரத் அவர்கள்,
வரலாற்றில் விவசாயிகளுக்கு ஒருபோதும் கிடைக்காத இலாபத்தை எமது அரசு வழங்கியுள்ளது. உற்பத்தி செலவை நீக்கி 30% இலாபம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் தாங்க முடியாமல் அரசாங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. எங்கள் குணாதிசயங்கள் குறித்து சொல்வதற்கு எதிர்க்கட்சிகளிடம் எதுவும் இல்லை. அதனால்தான் சில ஊடகங்களை பிடித்துக்கொண்டு அரசாங்க அமைச்சர்கள் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
வங்குரோத்து அரசியல்வாதிகளுக்கோ அல்லது விவசாயிகளின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் கொழும்பு 7ல் இருப்பவர்களுக்கோ அல்ல உத்தரவாத விலை வழங்கி சலுகைகளை பெற்றுக்கொடுத்தது.
இந்நாட்டு மக்களுக்கு, நாட்டுக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கே நிவாரணம் வழங்கப்பட்டது என்றும், அரிசிக்கான உத்தரவாத விலை எந்த வகையிலும் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மகாசங்கத்தினர், மக்கள் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.