உள்ளூராட்சி சபை தேர்தல்களை, தேர்தல் ஆணையம் வரும் ஏப்ரல் 24ஆம் திகதி நடத்துவதற்கான அறிவிப்பை விடுப்பதற்கு வசதி செய்யும் விதத்தில் அவசர அவசரமாகக் காய்களை பாராளுமன்றத்தில் நகர்த்துகின்றது தேசிய மக்கள் சக்தி அரசு.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. அது, இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் கிடைக்க வேண்டும்.
புதிய சட்ட மூலங்கள் தொடர்பான சட்ட ஒழுங்கு ஏற்பாடுகளின்படி அதுவே உரியகால அவகாசமாகும். அப்படி கிடைக்கும் உயர் நீதிமன்றத்தின் முடிவை பாராளுமன்றத்துக்கு அறிவிப்பதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தை விசேடமாகக் கூட்டுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
எதிர்வரும் 17 ஆம் திகதி முற்பகல் 10:30 மணிக்கு தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்.
அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றம் விசேடமாகக் கூடுகின்றது. அன்றைய தினமே அந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கான அறிவித்தல்களை விடுக்கும் அதிகாரம் அடுத்து வரும் நாள்களில் தேர்தல் ஆணையத்துக்குவந்து விடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
உளளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலை தமிழ் – சிங்களப் புது வருடம் முடிந்து அடுத்த 10 நாள்களில் – பெரும்பாலும் ஏப்ரல் 24ஆம் திகதி நடத்தக்கூடியதான தீர்மானம் ஒன்றைத் தேர்தல் ஆணையம் எடுப்பதற்கு இடமளிக்கும் விதத்தில் இந்தச் சட்ட நிறைவேற்ற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன