மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சு – ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க!

மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சு - ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க!

editor 2

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களை கோரவுள்ளதால் ஆரம்பத்தில் இருந்து தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

தேர்தல் பணிகளுக்கு தேவையான நிதி திறைசேரியால் ஒதுக்கப்பட்டுள்ளது ஆகவே, நிதி நெருக்கடி ஏதும் ஏற்படாது.

உள்ளூராட்சி அதிகார சபைகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தற்போது அவை விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதியை நிர்ணயிக்க முடியும்.

வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கும், தேர்தல் பிரசாரங்களை மேற் கொள்வதற்கும் போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

ஆகவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் உறுதியான தீர்மானத்தை எடுக்க முடியும்.

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உண்டு என்பதை தொடர்ச்சியாக
வலியுறுத்தியுள்ளோம்.

தேர்தல் முறைமை தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களில் கலப்புத் தேர்தல் முறைமை குறித்து பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.

எதிர்வரும் காலங்களில் அரசியல் கட்சிகளுடன் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து பேச்சில் ஈடுபடவுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து
செயற்பட வேண்டும்.

காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் உண்டு – என்றார்.

Share This Article